திங்கள், 25 அக்டோபர், 2010
பெண்மை
பள்ளிச் செல்லும் ஆசையினில்
மெல்லிய விரல்களால் மலர் தொடுத்து,
கந்தலான ஆடையினை
தைத்துக் கட்டி,
ஆவலாய்க் காத்திருந்தேன் !
எனை யீன்ற தகப்பனோ
கையில் காசுமில்லை,
கடன் வாங்க வழியுமில்லை.
பெண் மகளே, படித்தது போதும்,
ஆண் மகவு அண்ணன் மட்டும்
கல்விச் சாலை கண்டால் போதும் என்று,
அவனை மட்டும் அனுப்பி வைத்தான்!
என்னை அடுக்கிளையில்
தள்ளி விட்டான்!
பெண் மகவாய் நான் பிறந்தது
யார் செய்த பிழையென்று
புரியாத புதிரொன்றை
மனதினில் பதித்து வைத்தேன்,
இன்று வரை பதிலின்றி
எனக்குள்ளே தவிக்கின்றேன்!
மகள், இவள் கன்னிமை அடைந்து
மாதமெட்டு ஆகவில்லை.
அதற்குள், முல்லை பூமுடித்து
பட்டுப் புடவை அணிவித்து
மணமுடித்து அனுப்பிவைத்தார்,
தாம் கண்ட சாபமாய்
எனை கண்ட என் பெற்றோர்.
நான் அறிந்த மணவாளனேனும்
அன்பில் என்னைத் தாங்குவான்
என்றே எண்ணியிருந்தேன்;
கனவுலகில் மயங்கியிருந்தேன்.
வரமாய் நான் எண்ணிய
மாலையிட்ட கணவனோ
மதுவென்ற மாதவிக்கு
தன்னை யிழந்தான்.
கடனில் எனை ஆழ்த்தி விட்டு
தன் உயிரையுந் துறந்தான்.
பதினெட்டு அகவையில்
விதவைக் கோலம்.
எட்டு மாத மகனுடன்
வீதி ஊர்வலம்.
வாழ வழி யரியாத
பிஞ்சு மனதிற்கு,
தோள் சாய்ந்திருந்த மகனே,
வாழ்வின் லட்சியமாய்த் தெரிந்தான்.
என் கொழுந்து வளர்ந்திடவே
கடுமையாய் உழைத்து
இரவு பகல் பாராமல்
என் உயிரினை தேயவிட்டேன்.
நான் பெற்ற அன்பு மகவு
என் தோளினை தாண்டி விட்டான்.
அவனை தாங்கிய
என் வயிற்றில் மிதித்தே
வீதியில் தள்ளி விட்டான்.
நாற்பது வயதினில்
மீண்டும் ஓர் ஊர்வலம்.
காலம் முழுக்க போர் கண்ட
பெண் இவளின் வீதிவலம்.
தோள் கொடுக்க யாருமில்லை;
உயிர் மூச்சைத் தாங்கிடவே
இலட்சியமும் எனக்கில்லை.
மரணமேனும் எனக்கு
ஒய்வு தரட்டும்.
நான் பிறந்த மண்ணேனும்
என் மீது உரிமை கொள்ளட்டும்.
சிந்தித்து நோக்குகிறேன்
செல்லரித்த வாழ்க்கையினை!
கண்ணீரில் கரைக்கிறேன்
என் இதயக் காயங்களை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழியவே
எங்கும் நீராய் படர்ந்திருக்கும் கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய் பரவிக...
