சனி, 3 டிசம்பர், 2011

கண்ணீர்




அத்தனை மணிநேரம்
         காத்து வைத்திருந்தேன் ,
பாழாய்ப் போன வெங்காயம் வந்து
         உடைத்து விட்டது ....

வெள்ளி, 2 டிசம்பர், 2011

எல்லாம் நன்மைக்கே !!




வடித்த சிலையெல்லாம்
    விலைக்குப் போவதில்லை யென
பழகிய சிற்றுளி தன்னை
    விட்டேப் போவதில்லை !
கட்டிய தன் கூடு - காற்றில்
    கலைந்தழிந்தது என்று
எட்டி நின்றே பார்த்து
    குயிலின் கண்கள் வேர்பதில்லை !

கட்டிய நல்லாடை
    கலைந்தது யென்று
ஆடை கட்டவே நாமும்
    நாளும் மறுப்பதில்லை !
முயற்சி செய்தும்
    துயர் தொடர்ந்தது என்று
முயற்சி இன்றியே
    வாழ்வு செழிப்பதில்லை !

தேடிய அன்பு
    மறைந்தது என்று
உயிரில் கலந்த
    அன்பு அழிவதில்லை !
எட்டாத தூரம்
    சென்ற பொழுதும்
உயிரில் வற்றாத நதியென
    நட்பு நிலைக்கும் !

துளிர்விடும் ஒவ்வொரு பொழுதும்
    வாடும் துயரினை மறந்து
நெஞ்சில் உரம் கண்டு
    வேரில் உயிர் சேர்த்து
காலந்தரும் வசந்ததிற்காய்
    மிண்டும் துளிரும் தருணத்திற்காய்
காத்திருக்கும் விதை போல
  காத்திருப்பேன் விழிப்புடனே !

சனி, 5 நவம்பர், 2011

தேசிய வியாதி



மனித நேயம் கொல்லும்
    காட்டுமிராண்டி உலகத்தில்
நான் மனசாட்சியைக் கொல்லும்
    கோழையானக் காட்டுமிராண்டி.

நாடு எக்கேடு கெட்டுப் போனாலென்ன ?
    மக்கள் எக்கதி ஆனாலென்ன ?
என் வெள்ளைச் சட்டையில் கறையில்லை என்கும்
    உபயோகமில்லா உத்தமன் நான்!

உலமெல்லாம் கழிவுநீரில் மூழ்கினாலும்
    துர்நாற்றம் வானளாவிப் படர்ந்தாலும்,
என் வீட்டுச் சன்னலுக்குள் பதுங்கியிருந்து
    என் வெற்று உடலை அடைகாக்கும் கோழி நான்!

விளக்கில் எண்ணையாய் அமர்ந்து கொண்டு
    எரிவது நானெல்ல திரிதான் என்கும்
உண்மை உணரா பேதமை கொண்ட
    கற்ற உயர் நிலை மூடன் நான்!

இலஞ்சத்தை சாடி வாய்கிழிய பேசினாலும்
    எனக்கென வந்தால் என் வயிறே முதலிடம்.

நாடு போகும் போக்கைக் கண்டு,
    தேனீர் கடையில் வெகுண்டெழுந்து முறையிடுவேன்.
பின்பு தேனீர் தீர்ந்த மறுநிமிடம்
    என் தியான நிலை மீண்டும் தொடர்ந்திடுவேன்.

பச்சொந்தி இனம் கூட
    என்னோடு தோற்று விடும்.
கருங்கல் பாறை கூட, உணர்ச்சியில்
    என்னை முந்தக் கூடும்.

என் வீடு, என் வாழ்வு போதும் என்று
    அத்தனையும் இழந்த பரதேசி நான்!

வஞ்சகர் கையில் ஓட்டென்ற பெயரில்
    நாட்டை மலிவு விலைக்கு விற்றுவிட்டு,
அவர்கள் திருந்தி வாழ
    கடவுளை வேண்டும் பக்தன் நான்!

நாட்டைக் காக்க யாரேனும் வேண்டும்
    ஆனால் அவர் என்னைத் தவிர வேராக வேண்டும் என்று,
தன்னைத் தானே மறைத்துக் கொண்டு
    சந்திரனை ஒளி வீசச் சொல்லும் சூரியன் நான்!

வாழ்வு, கல்வி எல்லாம் இலஞ்சமாய் வாங்கிக்கொண்டு
    தேசத்தை ஏமாற்றும் சான்றொன் நான்!

என் நிலை எனக்கு புரிந்த போதும்
    ஒரு போதும் திருந்துவதில்லை.
என் தேசத்தின் கண்ணீர் துடைக்க,
    என் கரம் நீள்வதில்லை.


செவ்வாய், 19 ஜூலை, 2011

அவள் அறிந்தது...




என் உயிரின் ஆருயிரை
காண ஆவல் கொண்டு,
மாதம் ஈரைந்து
பத்தியம் கண்டு,
வேண்டி நின்ற அருமை மைந்தன்
பிறந்திட்ட பொழுது,
என் உயிரின் ஆழம் வரை
வருத்தும் அவ்வலியும்
சுகமாய்ப் போன அதிசயத்தை
எப்படி நான் சொல்லிடுவேன்?

பூவுலகின் மலர்களெல்லாம்
கடன் கேட்குமே,
செல்ல மகனவன்
கைவிரல் தீண்டலை!
தேனினிய தமிழும்
தோற்றுப் போகுமே,
செவித் திகட்டா - அவன்
மழலை மொழியிடம்!
கவிவேந்தர்களின் கவிதைகளெல்லாம்
கைகட்டி நிற்குமே,
தீஞ்சுவை பொழியும்
அவன் தேன்குரல் முன்னே!
கண்கோடி கிடைத்தாலும்
பற்றாமல் போகுமே,
தத்தித் தவழ்ந்து நடக்கும்
அவன் முதல் அடியினைக் காண!

பார்த்துப் பார்த்து
பரவசம் கொண்டு
எப்போது பசிக்கும்
எது நலம் பயக்குமெனத்
தேடி அறிந்து
உள்ள முவந்து,
உலகம் அவனெனக் கொண்டே
சீராட்டி மகிழ்ந்தேன்.
காலம் செல்லும் வேகத்திலே
நாளும் அவன் வளர்ந்தாலும்
பேதையிவள் விழிகளிலே
என்றுமவன் மழலையே!

கல்விச் சாலை காணுகிறான்;
நாளும் புதியன கற்கின்றான்;
சான்றோர் மொழிகள் பேசுகிறான்;
புதுமை பலவும் சொல்கிறான்;
பெருமிதம் கொண்டு மகிழும்
என்னை பார்த்தே,
"இது கூட தெரியாதா" என்று
மலர் இதழ் சிரிக்கின்றான்.

நான் பெண்ணாய் அழிந்து
தாயாய் பிறந்ததனால்,
அவன் உணர்வுகள் ஒன்றே
நான் தேடிய அறிவா யானதனால்
அவன் சிரிப்பும் மகிழ்வும்
கவலையும் கண்ணீரும்
கோபமும் எண்ணமும்
தேடலும் தவிப்பும்
அசைவுகள் ஒவ்வொன்றுமல்லாது எனக்கு
வேறேது தெரியும்!
இந்த அறியாமையும் எனக்கு
பெருமிதம் தானென்றும்
தாயான யெனக்கு
வேறேது வேண்டும்!

ஞாயிறு, 1 மே, 2011

இன்றே இறக்க வேண்டும்



இன்றே நான் இறக்க வேண்டும்.
பறவையெனப் பிறக்க வேண்டும்.
நாடு மொழி கண்டம் யென்று
மனிதனிட்ட யெல்லை தாண்டி,
வான மேகங்களை கிழித்தே நானும்
தரணி யெங்கும் உலாவ வேண்டும்.
சில்வண்டின் வாழ்நாள் போதும்
எனினும் சிக்கனமின்றி மகிழ வேண்டும்.

மெல்லிய மலர்களின்
நறுமணம் பேசிடும்
அடர்ந்தக் காட்டுக்குள்
கூடொன்று வேண்டும்
என்னாளும் அயராமல்
கூயிலின் தேன் குரல் கொண்டு
இயற்கை அன்னைக்கு வெண்பா பாடும்
நல் பரவசமும் வேண்டும்.

நாளை ஒன்று வேண்டும் என்று
ஆவல் எதும் இல்லாமல்
இன்றைய வாழ்வை இன்றே நானும்
முழுமையாய் ரசித்திட வேண்டும்.
சிறிதேனும் பிறருக்கு
பயனாக வேண்டும்.
அதனை விளம்பரம் செய்யாமல்
அமைதியாய் அழிந்திட வேண்டும்.

இறந்த பின் யாரும் என்னை
நினைக்கவும் வேண்டாம்.
என் காலம் தொலைந்த பின்
ஒரு கணமும் என்னை நினைத்து
தங்கள் வாழ்நாளின் சிறு துளியும்
ஒரு போதும் இழக்கவும் வேண்டாம்.
மகிழ்ந்தே இறந்தான் யென
மகிழ்ந்தால் போதும்....

வாழியவே

      எங்கும் நீராய் படர்ந்திருக்கும்     கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து     நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய்     பரவிக...