ஞாயிறு, 29 நவம்பர், 2020

பரம்பொருளைத் தேடி

 

 


  உள்ளத்தின் ஆழத்தில்
    உரைகின்ற இறைவனை
உணர்வுகளால் தன் மொழிப் பேசும்
    ஆன்மாவின் ஆன்மாவை
மனிதத்தில் மறைந்திருக்கும்
    புனிதத்தின் பரம்பொருளை
எல்லையில்லா அன்புப் பெருங்கடலை
    எங்கும் பரவி நிற்கும் பேராற்றலை
மனித உள்ளத்தின் ஆழத்தில்
    பிறந்திடும் எதிர்நோக்கின்
ஊற்றாய் உயிராய்
    ஓளியாய் ஆற்றலாய்
மூச்சாய் நிறைந்து
    நிதமும் காக்கும்
உருவிலா இறையை
    எங்கே தேடுகிறீர்கள்?

உள்ளங்களை ஊடுருவும்
    வலியறியா பிணங்கள் உங்கள்
சிதரடிக்கும் வெடிமருந்துக் கைவினைகள்
    தேடி தான் கண்டது என்ன?
உங்கள் துப்பாக்கி முனைகள்
    உலகில் நிறுவியதுதான் என்ன?
சிந்திய செந்நீர்களுக்கு
    விலை யார் தருவார்?
பிரிந்த உயிர்களின்
    இல்லாமையை யார் களைவார்?

உவர்ப்பற்ற உப்பிற்கு
    உணவில் பங்கென்ன?
பொருள் மறைந்த வார்த்தைகளுக்கு
நிலையான புனிதமென்ன?
உணர்வுகள் இழந்தபின்
    சிந்தனைகளின் சிறப்பென்ன?
மனிதம் இழந்தபின்
    மதங்களுக்கு மாண்பென்ன?

சக மனிதரின் துயர் அறியா
    இருள் நிறைந்த இதயத்தில்
சகலத்தின் பேரொளியின்
    கீற்றுக்கள் சேர முடியுமோ?
அண்டத்தின் ஆற்றலினை
    அணுவுக்குள் அடக்க முடியுமோ?
புரியாத புதிரான
    இறைவனை அடைய
அன்பெனும் நூல் பிடித்து
    உள்ளத்தின் ஆழ்துளையில்
மெல்ல மெல்ல இறங்கி வந்து
    பேரின்ப ஊற்றில் தனையிழந்து
யாவும் அவனென கரைவதே வழியென
    உண்மை இனியும் விளங்காதோ?


சனி, 28 நவம்பர், 2020

வலிகள் சுமக்கும் மனங்கள்

 

வலிகள் சுமக்கும் மனங்களை
    வழியெங்கும் காணுகிறேன்.
மனிதம் தொடரும் பயணங்களின்
    புனிதம் தினமும் உணர்கிறேன்.

தொழுநோய்த் தந்த
    ஆறாத புண்கள் போல்
உள்ளிருந்து உருக்கி
    உயிரை வாட்டும்
எத்தனையோ நினைவுகளால்
    கசங்கிய காய இதயங்கள்.

சுமந்திடவும் வலுவின்றி,
    இரக்கி வைக்கவும் வழியறியாது
அன்றாடம் அல்லலுரும்
    அவல வழிப்போக்கர்கள்.

மறைத்து வைத்தக் கண்ணீர் துளிகள்
    வெளியே எட்டிப் பார்க்கையில்
உணர்வுகளை உணர்ந்துகொண்டு
    உடன் நடக்க யாருமின்றி
ஒவ்வொரு பொழுதையும்
    நரகமென வாழ்ந்து முடிக்க
புன்னகை அரிதாரம்
    பூசிக் கொண்டு
தன்னையே மறந்திட
    விடாது தொடரும் போராளிகள்.

தீயாய் சுடும்
    இவர்களின் கதைகளை
செவியேர்க்கும் என் இருதயத்தில
    உணர்வுகள் தரும் பெருவலிகள்.

எதைச் சொல்ல?
    எதைச் செய்ய?
காயம் கொண்ட இதயங்களுக்கு
    என்ன மருந்து நான் தர?

வெற்று வார்த்தைகள்
    வேதனை தீர்க்குமா?
உடைந்த மற்பாண்டம்
    மீண்டும் சேருமோ?

தந்திட வார்த்தையில்லை
    செவிகள் மட்டும் தருகிறேன்.
உணர்வுகளில் நிறைந்து நான்
    என் மனிதம் தொடுகிறேன்.
சில மணித்துளிகள் உங்களுக்காக
    உடன் நடக்கத் துணிகிறேன்.
மனிதர்கள் உங்கள் மாண்பிற்காய்
    என் மனிதம் தருகிறேன்;.
என் ஆன்மாவின் ஆழத்தில்
    உங்களுக்காக வேண்டுகிறேன்.

இறைவா, என்னை நீ
    இன்றே புதுப்படைப்பாக்கு
கண்ணீர் துடைக்கும் துகிலாய்
    என்னை நீ உருவாக்கு.
வேதனை தீர்க்கும் மருந்தாக
    என் வாழ்வை பயன்படுத்து.

வெள்ளி, 1 மே, 2020

வளைந்தோடும் நதிப்பயணம்






விண்மீன்களின் ஒளியழகை
     விழிகளில் சேர்த்தது இருள்.
காதுகள் அடைந்த குயிலினிசை
     கேட்கச் செய்தது அமைதி.
மெல்லிய மணல் துகள்களை அழகாய்
     செதுக்கியது ஆர்ப்பரிக்கும் அலை.
தளிர்த்தோங்கும் நீலமரச் சோலைகள்
      விழுந்துடைந்த விதைகளின் எழுமை.

முரண்களின் எழிலோவியமே
    இயற்கையின் இயலியக்கம்.
முரண்கள் கலைந்தளிந்தால்
    வெற்றுத் தாளென வாழ்வாகும்.
உரக்கத்தான் மொழிகிறது
    இயற்கை இப்பேருண்மையை
தனக்குள் இழந்த மனிதமனம்
    ஏனோ ஏற்க மறுக்கிறது.

கணுக்களில்லா ழூங்கிலுண்டோ?
    நெளியாத நதியுமுண்டோ?
நேர்கோடு ஒவியமாகுமா?
    வளையாத பாதை முகடு சேருமா?
சுவைதேர் வாழ்க்கையினை
    தம் சூத்திரங்களுள் சுருக்கினால்,
அது பொருளற்ற நாடகமாய்
    சுவையிழந்து போய்விடும்.

நம் வாழ்வு தனித்ததல்ல
    தனித்து தன்னை பிரித்துக்கொள்ள.
படைப்பின் கடன்தொகையே நம் உடலின் அணுக்கள்
    இதில் நமதென்று எதைச்சொல்ல?
வீசிடும் மெல்லிய தென்றல்
    நம் கண்ணீரைக் கரைத்துச் செல்லும்.
எங்கும் எதிலும் எழுமொலி
    வாழ்வில் இன்னிசைச் சேர்க்கும்.

உயர்ந்தும் தாழ்ந்தும்
    நேளிந்தோடும் அலைகதிர் போல
எதிர்பாரா திருப்பங்களே
    வாழ்வின் அதிசயங்கள்.
வளைவுகளே புத்தொளிச் சேர்க்கும்
    கண்ணாடித் திரைகள்.
அவையில்லாது போனால்
    சுவையேது உலகில்.

வாழ்வில் வரும் வேதனைகள்
    வழிகாட்டும் கரங்கள்.
வந்த வழி ஆராய்ந்து
    பெற்றவை எண்ணி மனமகிழ்ந்து
புதிதாய் பிறந்து
    போகும் வழி தேர்ந்திடவே
இறைவனின் கருணை பொழிந்திடும்
    பயண இடைநிலை தருணங்கள்.

இன்பமும் துன்பமும் சுகமே
    என்றும் உறவில் இணைந்திருக்கையில்
பெற்றதெல்லாம் பெருஞ்செல்வம்
    கண்டதெல்லாம் அதிசயம்.
உடன் வந்தவரெல்லாம் பெருங்கொடை
    வாழ்வு தந்ததெல்லாம் நலமேயென
அனுபவித்து உணர்ந்தறிந்தால்
    அனைத்தும் அருள்சேர் கணங்கள்.

நிச்சயமற்ற தன்மையே
    வாழ்வின் பேரழகு.
கணக்கிடாமல் சுவைத்து
    வருவதை ருசித்து
சின்ன சின்ன நிகழ்வுகளில்
    வண்ண வண்ண நினைவுகள் சேர்த்து
மெல்ல மெல்ல ரசித்து
    மகிழ்ந்தே கனவுகள் வளர்ப்போம்.

வாழியவே

      எங்கும் நீராய் படர்ந்திருக்கும்     கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து     நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய்     பரவிக...