திங்கள், 13 ஏப்ரல், 2009

கவிதை















அழகு கமழும் இயற்கை
அது இறைவன் எழுதிய கவிதை!
குழந்தை பேசும் மழலை
அது மொழியின் கவிதை!
மலர்கள் தரும் நறுமணம்
செடிகள் வடித்த கவிதை!
பறவைகள் செய்யும் ரீங்காரம்
இனிமையின் மறபுக் கவிதை!
பட்டாம்பூச்சியின் நிறங்கள் எல்லாம்
இயற்கை வரைந்த கவிதை!
மண்ணை குளிர்விக்கும் மழையோ
மேகங்கள் பாடிய கவிதை!
அமைதி நிறைந்த உள்ளம்
அவை இன்பந்தரும் கவிதை!
போர்களற்ற அழகு பூமி
அது மனிதத்தின் வெற்றிக் கவிதை!


சனி, 11 ஏப்ரல், 2009

அந்தி மாலை மேகமே




புத்தாடை உடுத்தி நிற்கும்
அந்தி மாலை மேகமே!
உன் தோழி பூமி தேவதை
சிவந்த ஆடை பூண்டதாலா
நீயும் சிவந்த மேனி கொண்டு
உன் நட்பைக் காட்டுகிறாய்?
தோழி அவள் அணிந்திருப்பது
சிவந்த சாயம் இட்டதல்ல
அப்பாவி ஈழ சகோதரனின்
குருதி வடிந்து சிவந்ததென்று
அறியாமல் போனாயோ
பேதை மேகமே?
இல்லை!? அம்மறவரின்
இரத்தம் சிந்தித் தான்
நீயும் சிவந்தாயோ
நீல வானின் வெண்முகிலே?
மனிதனின் சாலை விதிகளில்
சிவப்பின் பொருளுணர்ந்து,
சிங்களக் கொடியவரும்
அதை உணர்ந்திருப்பர் என்றெண்ணி
குழந்தைகள் மகளிரெனப் பாராமல்
குண்டு மழையில் நனைப்பதையும்,
குருதிப் பசியில் தன்னிலை மறந்து
கண்மூடி கொலைகளம் புரிவதையும்,
தீயவை யாவையும் நிறுத்திடச் சொல்லிடவே
சிவந்த மேனி கொண்டாயோ வெண்முகிலே?
பேதை உன் மொழியினை
மனதினில் கொள்வரோ சிங்களவர்?
தமிழர் யாவரையும் கொல்லுவதே
தம் கொள்கையெனக் கொண்டவர்,
தமிழரின் மூச்சினை உயிரினை
நீ நிறுத்திடச் சொல்லுவதாயே எண்ணுவர்.
அடி ஏனடி பயந்துவிட்டாய்?
அதற்குள் முகம் யேன் கருத்துவிட்டாய்?
நாளை ஒன்று மலரும்,
அன்று அமைதி திரும்பும்!
ஈழர் தம் நாட்டில்
இனிய வாழ்வு நிலை மலர்ந்திடும்!
அன்று நீ மகிழ்வின் தென்றலில் குளிர்ந்து,
ஆனந்த வான் மழையை சிந்தி,
இரத்தக் கறை படிந்து சிவந்த
நில மகளின் முகத்தை துடைத்திடு!

வாழியவே

      எங்கும் நீராய் படர்ந்திருக்கும்     கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து     நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய்     பரவிக...