ஞாயிறு, 30 மே, 2021

காற்றாய் கரைந்திட




 மெய்யுடல் பற்றி

இவ்விடம் நிறைந்து

சிறைகண்டு நாளும்

படைப்பெங்கும் நிகழும்

எண்ணிலா அதிசயங்கள்

காணாதுக் கழிந்திடும்

இம்மனிதச் சிறுவாழ்வுக்

கடந்ததென நிலைமாறி

ஆனந்த அருளால் நிறைந்துக்

        காற்றாய் கரைந்திட மாட்டேனோ?

அன்பினால் அணுக்கள் ஒவ்வொன்றையும்

தொட்டணைக்க மாட்டேனோ?


பொங்கிவரும் அலையுடன் 

தவழ்ந்து நடைபோடுவேன்

நீர்குடித்து மேகமாய்

இப்புவியில் உயிர் வளர்ப்பேன்

மழைத்துளியின் விழுதுகளில்

ஓடி விளையாடுவேன்

சிந்தி விழும் அருவியோடு

விளையாட்டுச் சண்டையிடுவேன்


ஓங்கி உயர்ந்த மலைகளைத்

தொட்டு விளையாடிடுவேன்

பசுஞ்சோலை மரங்களில்

ஊஞ்சலாடி மகிழ்ந்திடுவேன்

பனிவிழுந்த புல்வெளியில்

மெய்மறந்து உறங்கிடுவேன்

மென்மையாய் நடந்து நான்

தென்றல் மொழி பேசிடுவேன்


கடலருகில் மணற்பரப்பில்

புதுக்கவிதைகள் தீட்டிவைப்பேன்

இரவில் நதிக்கரையில்

நட்சத்திரங்களை எண்ணிடுவேன்

நீரில் வரைந்த நிலாக்கோலங்களை

சிறிதாயத்; தீண்டி அலையசைப்பேன்

எங்கும் நிறை பேரழகை

        மெய் நிறுத்திச் சுவைத்திடுவேன்


மலர்கள் பிறந்த சேதியினை

ஊரெங்கும் முரசிசைப்பேன்

பறவைகளின் கரம்பிடித்துத் தினமும்

ஆடல் அறங்கேற்றிடுவேன்

குழலினுள் நெளிந்து நான்

புத்திசை வனைந்திடுவேன்

அசைவுகள் ஒவ்வொன்றையும் 

இசையாய் வடித்திடுவேன்


பட்டாம்பூச்சியின் சிறகினுள்ளே

கண்ணாம்பூச்சி ஆடிடுவேன்

செல்ல மொழி மழலையர்க்கு

முத்தமழை பரிசளிப்பேன்

எங்கும் மகிழ்வினை

நிறைவாய் விதைத்திடுவேன்

இயற்கையின் பேரியக்கத்தில்

என் வாழ்வின் பொருளறிவேன்


கண்ணீர்ச் சுமக்கும் கண்களின் 

வலியுணர்ந்து உடன்நடப்பேன்

ஆற்றலினைச் சேர்த்து நான்

நீசரைச் சிதரிடிப்பேன்

எத்திக்கும் பரவி நாளும்

வேற்றுமையை வேரறுப்பேன்

அமைதியென்னும் நல்லிசையை

நித்தம்பாடிக் களித்திடுவேன்


உயிராய் உணர்வுகளாய்

ஆன்மாவை ஊடுருவுவேன்

காதல் சொல்லும் உணர்வுகளை 

மென்மையாய் உணர்த்திடுவேன்

யாருக்கும் தெரியாத ரகசியங்கள்

எனக்குள்ளே மறைத்து வைப்பேன்

அனைத்திலும் நிறைந்திருக்கும்

இறைமையில் கறைந்திடுவேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழியவே

      எங்கும் நீராய் படர்ந்திருக்கும்     கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து     நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய்     பரவிக...