வியாழன், 17 ஜூன், 2021

தாகம் தீர்க்கும் பேரொளி


 


ஒப்புயர்வற்ற பேரொளி ஒன்று
    என் அகக்கண்கள் முன்
எல்லையில்லா திசை எங்கும்
    ஆழமும் அகலமும் அறியாத வண்ணம்
ஓங்கி உயர்ந்து கண்கள் கூசிட
    திகட்டாது ஈர்க்கும் பேரழகோடு
நிறைந்திருக்கும் நிலையை
    வெறும் வார்த்தைகளுக்குள்
அடக்கிட முயல்வது
    என் மடமையின் செரிவு.

விளங்கிட முடியா அப்பேரொளியை
    தன்னிலை இழந்து நான் எதிர் கண்டதும்
அணுக்கள் எல்லாம் ஆற்றல் பெருகி
    என் மெய்யுடல் சிதரிடுமோ என்றஞ்சுகையில்
என்னையே சற்று உணர்ந்தறியும்
    நினைவு கொண்டு நோக்குகையில்
அண்டங்களின் ஒளிவிண்மீன்கள் சேர்ந்தே
    நாணி நிற்கும் பேரொளிமுன்
சுட்டி விளக்கொளியின்
    சிறு கதிர் யான்
துணிந்து நிற்கும் பேதமையை
    உணர்ந்தே நாணியது நெஞ்சம்.

எனினும் தாய்சேய் உறவுபோல்
    அன்பினால் இணைந்ததனால்
பேரன்பு பெருகிடவே
    உள்ள தாகம் கட்டியிழுக்கவே
இச்சிற்றொளி தான் பேராசைகொண்டு
    அப்பேரொளியும் சேர்த்தணைக்க
அதனுள் அதுவென்றே
    மாறியதை நான் உணர்ந்தேன்.

எல்லையில்லா பரம்பொருளே,
    படைப்பனைத்தின் அகதாகமே!
நின் அளவில்லா பேரொளியில்
    குறைவு என்றிருத்தல் கூடுமோ?
ஆயினும் சிறுகதிர் என்னை
    தேடி உனில் சேர்ப்பதேன்?
உம் ஆனந்த பேரன்புக்
    கரங்களில் வைத்தே காத்தபோதும்
நிலைதவறித் துணிந்தே விலகியோடும்
    கடுகு மணிவிதையன்றோ நான்.

உன் பேரொளியில் நிறைந்தளிந்து
    கறைந்துறுகும் பேராவல் என்னில்
நிறைந்திருந்த போதிலும் தவறுகின்றேன்
    நொடிக்கு நூறுமுறை.
கரம்பிடித்து நடத்திடுவாய்
    பிரிந்திடாமல் உனக்குள் சேர்ந்திடுவாய்
நின் கருணையும் அன்புமின்றி
    வாழ்வு என்று ஏதுமில்லை
நின் ஒளியில் சேர்ந்திடாமல்
    இச்சுட்டி விளக்கு ஒளிர்வதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழியவே

      எங்கும் நீராய் படர்ந்திருக்கும்     கட்புலன் கடந்துநிற்கும் பேரறிவை வியந்து சுவைத்து     நனைந்து மகிழ்ந்து கலந்து நீரோடையாய்     பரவிக...