வலிகள் சுமக்கும் மனங்களை
வழியெங்கும் காணுகிறேன்.
மனிதம் தொடரும் பயணங்களின்
புனிதம் தினமும் உணர்கிறேன்.
தொழுநோய்த் தந்த
ஆறாத புண்கள் போல்
உள்ளிருந்து உருக்கி
உயிரை வாட்டும்
எத்தனையோ நினைவுகளால்
கசங்கிய காய இதயங்கள்.
சுமந்திடவும் வலுவின்றி,
இரக்கி வைக்கவும் வழியறியாது
அன்றாடம் அல்லலுரும்
அவல வழிப்போக்கர்கள்.
மறைத்து வைத்தக் கண்ணீர் துளிகள்
வெளியே எட்டிப் பார்க்கையில்
உணர்வுகளை உணர்ந்துகொண்டு
உடன் நடக்க யாருமின்றி
ஒவ்வொரு பொழுதையும்
நரகமென வாழ்ந்து முடிக்க
புன்னகை அரிதாரம்
பூசிக் கொண்டு
தன்னையே மறந்திட
விடாது தொடரும் போராளிகள்.
தீயாய் சுடும்
இவர்களின் கதைகளை
செவியேர்க்கும் என் இருதயத்தில
உணர்வுகள் தரும் பெருவலிகள்.
எதைச் சொல்ல?
எதைச் செய்ய?
காயம் கொண்ட இதயங்களுக்கு
என்ன மருந்து நான் தர?
வெற்று வார்த்தைகள்
வேதனை தீர்க்குமா?
உடைந்த மற்பாண்டம்
மீண்டும் சேருமோ?
தந்திட வார்த்தையில்லை
செவிகள் மட்டும் தருகிறேன்.
உணர்வுகளில் நிறைந்து நான்
என் மனிதம் தொடுகிறேன்.
சில மணித்துளிகள் உங்களுக்காக
உடன் நடக்கத் துணிகிறேன்.
மனிதர்கள் உங்கள் மாண்பிற்காய்
என் மனிதம் தருகிறேன்;.
என் ஆன்மாவின் ஆழத்தில்
உங்களுக்காக வேண்டுகிறேன்.
இறைவா, என்னை நீ
இன்றே புதுப்படைப்பாக்கு
கண்ணீர் துடைக்கும் துகிலாய்
என்னை நீ உருவாக்கு.
வேதனை தீர்க்கும் மருந்தாக
என் வாழ்வை பயன்படுத்து.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக